Disable text selection

October 3, 2012

கப்பலே கவிழ்ந்தாலும்.....

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே - என்று ஒரு பழமொழி உண்டு. பாட்டிகள் கூட பிள்ளைகள் கன்னத்தில் கை வைத்திருந்தால் "ஏண்டா கப்பல் கவிழ்ந்தாற்போல கன்னத்தில் கை வைத்து இருக்கிறாய்?" என்பார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள்? முகத்தில் கன்னத்தில் கைவைப்பதை தடுக்க ஏற்பட்டதல்ல.

கன்னம் என்பது கடப்பாறையை போன்ற ஒரு சாதனம். கன்னக்கோல் என்பர். திருடுவதற்கு, சுவற்றில் துளையிடவும், பூட்டுகளை உடைக்கவும் கதவுகளை தகர்க்கவும் பயன் படும்.

அந்த காலங்களில் பெறும் வணிகர்கள் தங்கள் பொருட்களை கப்பலின் ஏற்றி பிற நாடுகளுக்கு அனுப்பி, பொருள் ஈட்டி வருவர். அந்த கப்பல்கள் போய் வரும். இவர்கள் வீடுகளில் இருப்பர். செட்டி நாட்டில் இது போல பெரிய வணிகர்கள் உண்டு. பட்டினத்தாரும் அப்படி இருந்து துறவு பூண்டு போனவர் தானே.

அந்த கப்பல்களில் ஏதாவது விதி வசத்தால் கவிழ்ந்தால் தலைமுறைக்கும் ஆக வேண்டிய பொருள் நஷ்டமாகும். பல கப்பல் உடையவருக்கே அப்படி எனில் ஒரு கப்பல் மட்டுமே உடைய வாணிகனுக்கு எப்படி இருக்கும்?

அப்படி கப்பலே கவிழ்ந்து போனாலும், தவறியும் கன்னக்கோலை கையில் எடுத்து திருட்டு தொழிலில் இறங்கி விடாதே என்னும் பொருளில் தான், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே என்று சொல்லி இருக்க வேண்டும்.

No comments: